தொடரும் வடமாவட்ட வேட்டை.... உளுந்தூர்பேட்டையில் களம் காணும் 'கேப்டன்'...
சென்னை: வடதமிழகம் தேமுதிகவின் கோட்டைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இம்முறை உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் களமிறங்கியுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
சீனியர் நடிகரான விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கினார். அடுத்த ஆண்டே சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

விருத்தாசலம்
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அத்தேர்தலில் தனித்து போட்டியிட்டது தேமுதிக. பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என சொல்லப்பட்ட விருத்தாசலத்தில் விஜயகாந்த் வேட்பாளராக களமிறங்கினார்.

ஒற்றை எம்.எல்.ஏ.
அப்போது பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் பல இடங்களில் மோதல் வெடித்தது. ஆனால் அசராத விஜயகாந்த் அபார வெற்றி பெற்று பாமகவை அதிர வைத்தார். தேமுதிகவின் ஒரே எம்.எல்.ஏ. என்ற பெருமையுடன் சட்டசபைக்குள் நுழைந்தார் விஜயகாந்த். 2006 சட்டசபை தேர்தலில் மொத்தம் 61,337 வாக்குகளை விஜயகாந்த் பெற்றார். பாமக வேட்பாளர் கோவிந்தசாமியோ 47, 560 வாக்குகளைப் பெற்றார். மொத்தம் 13,777 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் விஜயகாந். அதிமுக வேட்பாளர் காசிநாதன் 35,876 வாக்குகளை மட்டுமே பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ரிஷிவந்தியம்
2011 சட்டசபை தேர்தலில் வடமாவட்டத்தின் மற்றொரு தொகுதியான ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டார் விஜயகாந்த். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சிவராஜ் போட்டியிட்டார். இத்தேர்தலில் 91,164 வாக்குகளை விஜயகாந்த் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் 60,369 வாக்குகளைத்தான் பெற முடிந்தது. விஜயகாந்த் 30,795 வாக்குகளில் அதிரடியாக வென்று காட்டினார்.

உளுந்தூர்பேட்டை
தற்போது மீண்டும் மற்றொரு வடமாவட்ட மையத் தொகுதியான உளுந்தூர்பேட்டையில் களம் காணுகிறார் விஜயகாந்த். அவரை எதிர்த்து திமுக, அதிமுக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் வலிமையாக உள்ள தொகுதியும் கூட உளுந்தூர்பேட்டை. கடந்த முறை ரிஷிவந்தியத்தில் வென்ற விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.. இம்முறை தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் "முதல்வர்" வேட்பாளராக உளுந்தூர்பேட்டை தொகுதியில் இறங்கியுள்ளார் விஜயகாந்த்.
எதிர்க்கட்சித் தலைவர் டூ முதல்வர் புரமோசன் 'கேப்டனுக்கு' கிடைக்குமா?












Click it and Unblock the Notifications