பா.ஜ.க. கூட்டணியில் இல்லை என விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை: அடம்பிடிக்கும் பொன்னார்
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறவில்லை என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் சிறிது காலம் அக்கூட்டணியில் நீடித்தது தே.மு.தி.க.
ஒருகட்டத்தில் பா.ஜ.க.வை விட்டு விலகி காங்கிரஸுடன் நெருக்கம் காட்டினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அப்போது நான் எந்த கூட்டணியிலும் இல்லை என்று முகத்தில் அறைந்தாற் போல பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்தார்.

ஆனால் பா.ஜ.க. தலைவர்களோ விடாது கருப்பாக, தே.மு.தி.க. எங்களது கூட்டணியிலேயே நீடிக்கிறது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் தம்மை சந்தித்த பா.ஜ.க. தலைவர்களிடமும் நான் கூட்டணியில் இருப்பதாக நீங்கள் கருதினால் எனக்கான என்ன மரியாதை கொடுத்திருக்கிறீர்கள் என எகிறியிருந்தார்.
அதன்பின்னர் நேற்று பத்திரிகையாளர்களை காறித் துப்பிய நிகழ்வின்போதும் கூட விஜயகாந்த், நாங்கள் கூட்டணியில் இருப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும் என்று மீண்டும் முகத்தில் அறைந்தது போல கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறவில்லை என்று விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் அநாகரிகமாக (காறித் துப்பியது) நடந்து கொண்டதை தவிர்த்திருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications