மா.செக்களை அழைத்து ஆறுதல் + ஆலோசனை நடத்திய விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி தேர்தல் தோல்வி குறித்து விவாதித்தார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தொகுதிப் பங்கீடு மட்டும் செய்து கொண்டு போட்டியிட்டது தேமுதிக. 104 தொகுதிகளை எடுத்துக் கொண்டு மிச்சத் தொகுதிகளை மக்கள் நலக் கூட்டணிக்குக் கொடுத்தது. பின்னர் தமாகவும் இக்கூட்டணிக்கு வந்து சேர்ந்தது.

தேர்தலில் எதிர்பாராத வகையில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது தேமுதிக. கட்சித் தலைவர் விஜயகாந்த் டெபாசிட் இழந்த கொடுமையையும் அக்கட்சி பார்த்தது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விஜயகாந்த்தைப் போய்ப் பார்த்து பேசி விட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று தனது கட்சி நிர்வாகிகளை விஜயகாந்த் அழைத்துப் பேசினார். கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று சில மாவட்ட செயலாளர்கள் வந்திருந்தனர். அவர்களை சந்தித்து பேசிய விஜயகாந்த் தேர்தல் தோல்வி, அடுத்தகட்ட நிலை குறித்து கேட்டறிந்தார்.
மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை அவர் தொடர்ந்து கேட்கிறார். 3 நாட்களுக்கு அவர் நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இந்த ஆலோசனையின்போது அடுத்து என்ன செய்யலாம், எப்படி செயல்படலாம் என்பது குறித்து விஜயகாந்த் கட்சியினருடன் விவாதித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications