ஜெயலலிதாவுக்கு புதிய விருது வழங்க விஜயகாந்த் சிபாரிசு!
திருச்செங்கோடு: சொத்துக்குவிப்பு வழக்கை 17 ஆண்டுகளாக இழுத்தடித்து வரும் ஜெயலலிதாவுக்கு வாய்தா ராணி என்ற விருது வழங்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தேமுதிக வேட்பாளர் வேலுவை ஆதரித்து விஜய்காந்த் பேசியதாவது:
நிதியமைச்சர் சிதம்பரம் பிஎப் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். லாபம் வந்தால் தருவாராம். இல்லை என்றால் மக்கள் தலையில் அந்த நஷ்டம் ஏற்றப்படும்.

லாரி தொழில்
நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரியில் ரிக் லாரி தொழில் அதிகம். அதற்கான நல வாரியம் அமைக்குமாறு, பல்லாண்டுகளாக கோரிக்கை வைத்தும் தமிழக அரசு செய்யவில்லை.

வாய்தா ராணி விருது
கடந்த 17 வருடங்களாக சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்து வருகிறார். மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார். அவருக்கு, வாய்தா ராணி என்ற விருது கொடுக்கலாம்.

வரியை குறைக்கலாம்
டீசல், பெட்ரோல் விலையை காங்கிரஸ் அரசு உயர்த்திக்கொண்டே போகிறது. மக்களுக்கு நல்லது செய்ய ஜெயலலிதா நினைத்தால், ஏன் இதன் மேல் போடப்பட்ட வரியை குறைக்க கூடாது?

மலைப்பாதை
மேட்டூர் உபரி நீரை திருமணி முத்தாற்றில் கலக்கும் திட்டத்தையாவது செய்தார்களா என்றால் இல்லை. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கு மாற்றுப்பாதையை எங்கள் எம்எல்ஏ சம்பத்குமார் பல முறை சட்டசபையில் கேட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. அதே போல கண்ணகி கோட்டமும் கட்டப்படவில்லை.

புறவழிச்சாலை
2 லட்சம் மாணவர்கள் படிக்கும் திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம். புறவழிச்சாலை கட்டுவேன் என்று கூறியதோடு சரி. ஆனால் பணிகள் ஏதும் நடக்கவில்லை.

மின் தட்டுப்பாடு
நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளித்தொழில் வளர மின்சாரம் தேவை. அது போதிய அளவு கிடைப்பதில்லை. அதனால் ஜவுளித்தொழில் முடங்கி விட்டது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

நடித்து காட்டிய விஜயகாந்த்
அதேபோல வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிய விஜயகாந்த், வறட்சி நிவாரணத்திற்காக அதிகாரிகள் கணக்கெடுக்க வந்தபோது நடந்த சம்பவங்களை நடித்து காட்டினார்.












Click it and Unblock the Notifications