கூட்டணி குழப்பத்தால் விஜயகாந்த் செல்வாக்கு சரிவு- அதிமுகவுக்கே வெற்றி: பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி: யாருடன் கூட்டணி வைப்பது என்று முடிவெடுக்க முடியாமல் விஜயகாந்த் குழப்பத்தில் இருப்பதால் அவருடைய செல்வாக்கு சரிந்துவிட்டது என்று தேமுதிக முன்னாள் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மக்கள் மத்தியில் தி.மு.க. மேலும் செல்வாக்கு இழந்து விடும். தே.மு.தி.க. ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருந்தது.
சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்த கட்சி மாநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? என விஜயகாந்த் அறிவிப்பார் என தே.மு.தி.க. தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதால் இதுபற்றி அறிவிக்கவில்லை. எனவே கட்சி தொண்டர்கள் மத்தியிலும் அவர்செல்வாக்கு இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்.
நாடாளுமன்றத் தேர்தலில் எனது மகன் சம்பத் போட்டியிடுவார் என்று கூறப்படுவது வெறும் வதந்தி. ஆலத்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்.