கருணாநிதியை அடுத்த வாரம் 'அமாவாசை'நாளில் சந்திக்கிறார் விஜயகாந்த்
சென்னை: திமுக- தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அடுத்த வாரம் 8-ந் தேதியன்று அமாவாசை நாளில் சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதும் தேமுதிக வரும்... ஆனா வராது என்கிற போக்கில்தான் இருந்து வந்தது. இந்நிலையில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், விஜயகாந்த்தை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து திமுக- 150; தேமுதிக- 59; காங்கிரஸ் - 25 தொகுதிகளில் போட்டியிட முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதர சிறு கட்சிகளுக்கு திமுகவின் 150 தொகுதிகளில் இருந்து தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன.
ஆனால் இன்னமும் கூட்டணி உறுதியாகவில்லை; எந்த கூட்டணியிலும் தான் சேரவில்லை என்று நேற்று விஜயகாந்த் கூறியிருந்தார். அதே நேரத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து பேச சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை பகிரங்கமாக சந்திக்கவும் விஜயகாந்த் மறுத்துவிட்டார்.
மீனம்பாக்கம் அருகே தேமுதிக பிரமுகர் இல்லத்தில் விஜயகாந்த்தை ஜவடேகர் ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. திமுகவுடனான கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்தே ஜவடேகரை விஜயகாந்த் பகிரங்கமாக சந்திக்க மறுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை வரும் 8-ந் தேதியன்று அமாவாசை நாளில் நேரில் சந்தித்து திமுக- தேமுதிக கூட்டணியை விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் 'முறைப்படியான' தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.