விஜயகாந்த்திடமிருந்து பாசிட்டிவ் பதில் வரவில்லை: ஒப்புக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: கூட்டணி குறித்து தே.மு.தி.க. தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ தகவலும் வரவில்லை என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கூட்டணி குறித்து தே.மு.தி.க. தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ தகவலும் வரவில்லை. சென்னை வந்த பிரகாஷ் ஜவடேகர், விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோரை சந்தித்தாரா, இல்லையா என எனக்கு தெரியாது. டெல்லி செல்லும் நான், பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசுவேன் என்றார்.
முன்னதாக, கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, அவர், சட்டமன்ற தேர்தல் தேதி இரண்டொரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதை பா.ஜனதா அரசியலாக்க விரும்பவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்துக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கும் என்றார்.