மெரினாவில் 144 தடை உத்தரவை அப்பவே போட்டிருந்தா பிரச்சனை வந்திருக்காது... உளறி கொட்டிய விஜயகாந்த்
மெரினாவில் 144 தடை உத்தரவை முன்னரே போட்டிருந்தால் பிரச்சனை வந்திருக்காது என உளறி கொட்டியிருக்கிறார் விஜயகாந்த்.
சென்னை: சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவை அப்பவே போட்டிருந்தா எந்த பிரச்சனையுமே வந்திருக்காது என உளறி கொட்டியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள மீட்புக்காக வரலாறு காணாத யுகப் புரட்சியை நடத்தியது தமிழக இளைஞர் படை. இன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை உடைத்து சரித்திரம் படைத்திருக்கிறது.

தீக்கிரையான நடுக்குப்பம்
இந்த யுகப் புரட்சிக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் போலீசாரின் குண்டாந்தடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் நரவேட்டையில் சிக்கிய சென்னை நடுக்குப்பம் மீனவ கிராமம் தீக்கிரையானது.

நீங்களும் சமூக விரோதி
இந்த மீனவர் பகுதியை நேற்று பார்வையிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், தாம் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் செய்தியாளர்களிடம் உளறிக் கொட்டினார். உங்கள் பார்வையில் யார் சமூக விரோதி என கேட்டதற்கு என் பார்வையில் நீங்க கூடதான் சமூக விரோதி என கூறினார்.

அப்பவே போட்டிருக்கனும்
அதேபோல் தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானது என நினைக்கிறீர்களா என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், இல்லை.. இல்லை.. இப்ப வந்து 124....அது 144 தடை உத்தரவை முதல்லே போட்டிருந்தா சரியா இருந்திருக்கும்.. என்கிட்ட கேட்க வேண்டாம்.. ஏன்னா அரசியல்வாதி இல்ல.. அவரை குறைசொன்னா தப்பா போயிரும்ல மன்னிச்சுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன் என இருகரம் கூப்பி சொல்லிவிட்டு கிளம்பினார் விஜயகாந்த்.

அவருக்குதான் வெளிச்சம்
விஜயகாந்தின் இந்த பேட்டி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், மெரினாவில் 144 தடை உத்தரவு இப்போது போட்டது தவறு என்கிறார்.. சரி அதை புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால் முதல்லே போட்டிருந்தா சரியா இருந்திருக்கும் எனில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை ஒடுக்கி இருக்க வேண்டும் என்கிறாரா? அது விஜயகாந்துக்கே வெளிச்சம்!












Click it and Unblock the Notifications