நாளை 'தாயகம்' திரும்புகிறார் விஜயகாந்த்....!
சென்னை: மகன் படப்பிடிப்பை மேற்பார்வையிடுவதற்காக மலேசியாவுக்குப் போயிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சென்னை திரும்புகின்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்த சில நாட்களிலேயே அதாவது நவம்பர் 7ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.

அவருடன் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்றிருந்தனர். அவர்கள் போன பின்னர் தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். சலசலப்புகள். இருப்பினும் விஜயகாந்த் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. 2 -3 அறிக்கைகள் மட்டும் விட்டிருந்தார்.
மாறாக தனது மகன் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தார். மலேசியாவில் 10 நாட்களுக்கு மேலாக சண்முக பாண்டியன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு படப்பிடிப்பு குழுவினர் சிங்கப்பூர் சென்றனர். அங்கும் சண்முக பாண்டியன் நடித்த காட்சிகள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் நேற்று முடிவடைந்ததால் விஜயகாந்த் நாளை காலை சென்னை திரும்புவதாக தே.மு.தி.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை கூட்டம் 4 ஆம் தேதி கூடுவதால் அதில் விஜயகாந்த் பங்கேற்பார் என்றும், இதற்காக நாளை மாலை தே.மு.தி.க நிர்வாகிகளை சந்தித்து, சட்டசபையில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்க இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விஜயகாந்த் திரும்பி வருவதால் தேமுதிகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இனிமேலாவது தலைவர் பட்டையைக் கிளப்புவாரா என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
எல்லாம் சரி, சட்டசபையில் இந்த முறையும் நாக்கைத் துருத்துவாரா அல்லது நல்லபடியாக பேசுவாரா என்று தெரியலையே!












Click it and Unblock the Notifications