தேமுதிகவை 'சிதறு தேங்காயாக்கி' முரசு சின்னத்தை முடக்க அதிமுக, திமுக 'பலே' ப்ளான்
சென்னை: தேமுதிகவின் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்களை வளைத்து அக்கட்சியையே இரண்டாக பிளவுபடுத்தி முரசு சின்னத்தை முடக்குவதற்கு அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. ஆனால் தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி வென்ற பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. தேமுதிகவின் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அதிமுக ஆதரவாளர்களாக மாறினர்.

கடைசியில் அவர்கள் அதிமுகவின் உறுப்பினர்களாகவே மாறிப் போயினர். இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையே தேமுதிக இழந்தது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால் தற்போது மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்திருக்கிறது. இது திமுகவை மட்டுமல்ல தேமுதிக நிர்வாகிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே தேமுதிக நிர்வாகிகள் திமுகவுக்கு தாவி வருகிற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தேமுதிகவின் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்களை கணிசமாக வளைத்து அந்த கட்சியையே இரண்டாக உடைக்கவும் திமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக சென்னையில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும் செய்திகள் பரவுகின்றன.
இதேபோல் அதிமுக தரப்பும் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை வளைக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டும் நிலையில் தேமுதிகவை இரண்டாக உடைத்து அதன் முரசு சின்னத்தை முடக்கும் வகையில் திமுகவும், அதிமுகவும் வியூகங்கள் வகுத்து செயல்படுத்தி வருவதால் தேமுதிக தலைமை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications