கெடு விதித்த அத்தனை பேரையும் கட்சியை விட்டு தூக்கி எறிந்த விஜயகாந்த்!
சென்னை: தேமுதிகவில் போர்க்கொடி உயர்த்தி விஜயகாந்துக்கு கெடு விதித்த சந்திரகுமார் உட்பட அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், நீக்கப்பட்டுள்ளவர்களுக்காக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேமுதிக தேர்தலை சந்திக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரக்குமார் தலைமையில் இன்று கூடிய அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மாவட்ட செயலாளர்களும், விஜயகாந்த் முடிவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மக்கள்நலக் கூட்டணியோடு சேர்ந்து எத்தனை வாக்குகளை பெற முடியும் என கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது அதே கூட்டணியில் இணைய என்ன காரணம்? என சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தேமுதிகவில் இருந்து விலகவில்லை என்று கூறிய அவர் விஜயகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கெடு விதித்தார்.
இந்த நிலையில் விஜயகாந்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை
தேசிய முற்போக்கு திராவிட கழகம், கழக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், கழக துணைச்செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று (05.04.2016) முதல் நீக்கப்படுகிறார்.
இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போர்க்கொடி தூக்கிய 3 எம்.எல்.ஏ.க்கள், 6 மா.செ.க்கள் தேமுதிகவில் இருந்து டிஸ்மிஸ்- #விஜயகாந்த் அதிரடி #DMDK pic.twitter.com/04HYf0R8gJ
— Oneindia Tamil (@thatsTamil) April 5, 2016
புதிய நிர்வாகிகள் நியமனம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம்(ஆஊ) (மாவட்ட கழக அவைத்தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்.எல்.ஏ, வேலூர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக ஸ்ரீதர் (முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு (கழக மாணவரணி துணைச்செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி (கழக நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட கழக துணைச்செயலாளர்) ஆகியோர் இன்று (05.04.2016) முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சிபெற பாடுபடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications