நடப்பது தர்மயுத்தம்... மக்களே நீங்கள் யார் பக்கம்?: விஜயகாந்த்
சென்னை: நல்லவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது மக்களே நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்று தேமுதிக தலைவரும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. கூட்டணி உறுதியானதையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். சென்னை தாம்பரத்தில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்,
இந்த சட்டசபைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வேண்டுமா? இல்லை திமுக, அதிமுக கூட்டணிகள் வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு எடுப்பார்கள் என்றார்.

வேலை வாய்ப்பு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்போம்.
மு.க. ஸ்டாலின் எண்ணங்களும் நோக்கங்களும் அவரை அழித்துவிடும். இந்த தேர்தலில் அனுதாபத்தை ஏற்படுத்த கருணாநிதி முயற்சி செய்கிறார்.

நல்லவர்கள் கூட்டணி
நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் உள்ளனர். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது. எங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சுதந்திரப்போர்
அன்று நடந்ததைப் போல் இன்று நடப்பதும் சுதந்திர போர்தான் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.வெள்ளையனே வெளியேறு போன்று இப்போது நடப்பது கொள்ளையனே வெளியேறு போராட்டம் என்றார் விஜயகாந்த்.

கொள்ளையடிக்கும் கும்பல்
மேலும் தமிழகத்தை கொள்ளையடிக்கும் அதிமுக ஆட்சியை எதிர்த்து தற்போது தேர்தல் போர் நடைப்பெறுகிறது. மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா கூறுவது அனைத்தும் சொத்தையும் கொள்ளையடித்து போகத்தான் அவர் கூறியுள்ளார்.

வேட்பாளர் பட்டியல்
தமது கூட்டணியில் தப்பு செய்தால் தட்டிக்கேட்க 5 பேர் உள்ளனர். தேமுதிக மற்றும் மக்கள் நலக்கூட்டனியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படலாம் என விஜயகாந்த் கூறினார்.

ஊழல் ஆட்சி
முன்னதாக மாலையில் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் சதுக்கத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், இன்று நாங்கள் 6 கட்சிகளும் ஒரே கொள்கைக்காக அணி சேர்ந்து உள்ளோம். கடந்த 50 வருஷமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு நாட்டில் ஊழல் நிறைந்து விட்டது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications