சட்டசபை நிகழ்ச்சிகளை லைவ் செய்யும் விவகாரம்... சுப்ரீம் கோர்ட்டில் விஜயகாந்த் அப்பீல்
சென்னை: தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப அனுமதி கோரும் வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப அனுமதி கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து விஜயகாந்த் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தமது டி.வி சேனலுக்கும் அனுமதி தர கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்துள்ளார்.
நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரும் வழக்கில் தம்மையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப நிதி பற்றாக்குறை தான் காரணம் என தமிழக அரசு கூறுகிறது. அவை நடவடிக்கைகளை காண்பது மக்களின் ஜனநாயக உரிமை, நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.