விஜயகாந்த் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும்: வைகோ
நாகர்கோவில்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திடலில் மக்கள் நலக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,
குமரி மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு உள்ள மாவட்டம். கேரளாவை தமிழகம் பின்பற்றும் என மலையாள தொலைக்காட்சி நிருபரிடம் தெரிவித்தேன். கேரள மாநிலத்தில் பணம் கொடுத்து வாக்கு பெற முடியாது. அதே போன்று தான் இம்முறை தமிழகத்தில் நடக்கும். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று கூறினேன்.
அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற கட்சியினர் உழைக்க உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் செய்த சாதனைகளை கூறி மக்களிடம் ஓட்டு கேட்க முடியுமா? தொகுதிக்கு ரூ.10 கோடி என 234 தொகுதிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறிதாவூர் பங்களாவில் பணத்தை குவித்து வைத்துள்ளனர். அதை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும். டிஜிபி அசோக் குமார் ஜெயலலிதாவின் எடுபிடி ஆளாக இருக்கிறார். அவர் தான் வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளாராம். அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி அமைய வேண்டும். விஜயகாந்த் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும். தற்போது தமிழகத்தில் எங்களுக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications