மக்களுக்கு பலனளிக்கும் ஆட்சியை வழங்கிட வேண்டும் - விஜயகாந்த்
சென்னை: சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஆளும்கட்சியினர் ஈடுபடுவதை இந்த அரசு உடனடியாக தடுத்து, மக்களுக்கு பலனளிக்கும் ஆட்சியை வழங்கிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சித் தலைவர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த பார்த்திபன் சர்வதேச செம்மரக்கட்டை கடத்தும் கும்பலோடு தொடர்புவைத்துள்ளதை, ஆந்திர காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து உள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டு, இதுபோன்ற நிகழ்வுகளை கண்டும்காணாமல் இருந்து கொண்டு, பல கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது மக்கள் மத்தியில் பெருத்த கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு பலனளிக்கக்கூடிய வகையில் செயல்பட வேண்டிய ஆளுங்கட்சியினர், ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் துணைகொண்டு சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான செயல்களில் ஈடுபடுவது, ஆளும் அரசுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக்கட்டை கடத்தல் விவகாரங்களில் ஆந்திர காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த சூழ்நிலையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஆளும்கட்சியினர் ஈடுபடுவதை இந்த அரசு உடனடியாக தடுத்து, மக்களுக்கு பலனளிக்கும் ஆட்சியை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications