மாநாடு வெற்றி... தேமுதிக மக்களுக்கு நல்லாட்சி தரும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது: விஜயகாந்த்
சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாடு வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காஞ்சிபுரம் அருகே வேடலில் தேமுதிக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வேட்பாளர்களை நேர்காணல் செய்யும் போது, கூட்டணி குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என விஜயகாந்த் அறிவித்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநாடு வெற்றி பெற்றிருப்பன் மூலம் தமிழக மக்களுக்கு தேமுதிக நல்லாட்சியைத் தரும் என்ற நம்பிக்கை விதைத்திருப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்புமுனை மாநாடு...
தேமுதிக மாநாடு வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த மாநாட்டின் வெற்றி தமிழக மக்களுக்கு தே.மு.தி.க. நல்லாட்சியை தரும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. ஒன்றிணைவோம், வென்றிடுவோம் என்ற லட்சியத்தோடு, நமது தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு நடந்து முடிந்தாலும், ஊழல் ஆட்சிக்கு எதிரான நம்முடைய செயல்பாடுகள் தமிழகம் எங்கும் ஒரு அதிர்வலையை உருவாக்கி இருக்கிறது.

இந்த வெற்றிக்கு இரவு, பகல் பாராமல் பாடுபட்ட காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் காஞ்சீபுரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், இவர்களுடன் இணைந்து பணியாற்றிய மாநாட்டுக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளை கழக செயலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இந்த மாநாடு வெற்றி பெற தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், வாழ்த்து செய்தி அனுப்பியவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேமுதிக மாநாடு வெற்றி பெற பாஜக, மக்கள் நலக்கூட்டணி ஆகியவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications