மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறையிடம் நடுநிலை வேண்டாமா- விஜயகாந்த்
சென்னை: மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறை நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். எட்டு மாத காலம் மட்டுமே ஆட்சி அதிகாரம் உள்ள தமிழக ஆட்சியாளர்களை நம்பி செயல்படலாமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மது விலக்கை வலியுறுத்தி தேமுதிக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காததற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சாலையோரத்தில் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து
தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ஜனநாயகமுறைப்படி அகிம்சைவழி போராட்டமான, தேமுதிகவின் மனிதசங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வன்மையாக கண்டிக்கிறேன். பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல், சாலையோரத்தில் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து அமைதியான முறையில் நிற்பதற்கு கூட அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்படுகிறதென்றால், இந்த ஏதேச்சதிகாரமான அராஜகபோக்கை மக்கள் பார்த்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.உரிய நேரத்தில் தக்க பாடத்தை இந்த அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் கற்பிப்பார்கள்.
காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
அமைதி வழியில் போராட்டம் நடத்திய தேமுதிக தொண்டர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக, சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். காவல்துறையினர் என்னையும், என்னுடன் சுமார் ஐம்பது நபர்களை மட்டும் கைது செய்துள்ளோம் எனக்கூறி, ஒரு பேருந்தை மட்டும் கொண்டுவந்து, எங்களை அழைத்து செல்லும்போது அங்கிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த பேருந்தின் பின்னால் நடந்து வந்தனர்.
கேவலமான நிலை
காவல்துறையின்உதவி ஆணையர் மோகன்ராஜ் மற்றும் காவலர்கள் அவர்களை வரவிடாமல் கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு மட்டுமல்ல பேருந்தில் கைது செய்து அழைத்து வந்தவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் என்ன வன்முறையாளர்களா? தீவிரவாதிகளா? நிராயுதபாணியாக இருந்தவர்களை தாக்கும் அளவிற்கு கேவலமான நிலையில் தமிழககாவல்துறை,அதிமுகஅரசின் ஏவல்துறையாக மாறியுள்ளது.
அண்ணா நகர் ஆர்ச் பகுதியில்
அண்ணாநகர் ஆர்ச் பகுதியில் தேமுதிகவினரை காவல்துறை கைதுசெய்து பேருந்தில் அழைத்துச் சென்றபோது, அதிமுகவினர் கும்பலாக சேர்ந்துகொண்டு பேருந்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். அதில் பேருந்தின் கண்ணாடி நொறுங்கியுள்ளது. இது வரையிலும் சம்மந்தப்பட்டவர்கள் யாரென தெரிந்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை? எட்டு மாத காலம் மட்டுமே ஆட்சி அதிகாரமுள்ள தமிழக ஆட்சியாளர்களை நம்பி, தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறையோ, அரசுஅதிகாரிகளோ நடுநிலையோடு நடந்துகொள்ளாமல் பாகுபாடு பார்ப்பது முறையா?
அனைவருக்கும் நன்றி
தேமுதிகவின் அறவழி போராட்டத்தைஆதரித்து,அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கும், நேரில் வந்து ஆதரவும், அரசுக்குக் கண்டனமும் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர்,போராட்டத்திற்கு ஆதரவும்,அரசுக்கு கண்டனமும் அறிக்கை வாயிலாக தெரிவித்த பாஜக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, சி.பி.எம் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, ஐஜேகே செயல் தலைவர் ரவி, முகநூலில் ஆதரவும், அரசுக்கு கண்டனமும் தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைப்புகள், முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாபெரும் வெற்றி
பூரணமதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு மாபெரும் வெற்றிப்போராட்டமாக மாற்றி, காவல்துறையின் அத்துமீறல்களுக்கு அஞ்சிடாமலும், இறுதிவரை போராட்டக்களத்தில் இணைந்திருந்த தேமுதிக நிர்வாகிகள்,தொண்டர்கள், இளைஞர்கள், மகளிர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.தே முதிகவின் இதுபோன்ற அறப்போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.