தண்ணீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நதிநீர் இணைப்புதான்.... விஜயகாந்த்
சென்னை: மாநிலங்கள் தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது; தமிழகமும் தண்ணீருக்காக அண்டை மாநிலத்திடம் கையேந்தாத நிலையை உருவாக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் நாள்தோறும் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது.

நிரந்தர தீர்வு தேவை
ஒவ்வொரு வருடமும், இந்த மாதங்களில் கர்நாடகத்திடம் காவிரியில் தண்ணீர் விட போராடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைச்சருக்கு கண்டனம்
விவசாயிகள் தங்கள் பிரச்சனையை தொடர்ந்து வலியுறுத்தியும் தமிழக அரசு வாயே திறக்காமல் மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது. அமைச்சர் கருப்பண்ணன் பொது கூட்டத்தில் பேசும் போது தமிழக விவசாயிகள் கோடிஸ்வரர்களாக இருப்பதாக பேசி இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் உள்ளது. அமைச்சரின் பேச்சு மிகவும் கண்டனத்துக்குரியது.

தலைகுனிவு
இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். ஆனால் நமது விவசாயிகள் வறுமையிலும், கடனிலும், ஏழ்மையிலும் இருப்பது நமது நாட்டுக்கே தலைகுனிவு.

இதுதான் தீர்வு
தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வுகாண வரும் மழைக்காலத்திற்குள் அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி, வரமாக கடவுள் நமக்கு தரும் மழையை சேமித்து விவசாயத்திற்கும், குடி தண்ணீருக்கும், அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நதிகள் இணைப்பு
தண்ணீர் பிரச்சனையை நாட்டின் முக்கிய பிரச்சனையாக எடுத்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகள் நமது நதிகளை இணைப்பதன் மூலமே நிரந்தர தீர்வு ஏற்படும்.

மக்கள் பிரச்சனையாக கூடாது
மாநிலங்களுக்கிடையே இருக்கும் தண்ணீர் பிரச்சனை, மாநிலங்களுக்கிடையேயான மக்கள் பிரச்சனையாக மாறாமல் தடுக்கப்பட வேண்டும்.

அரசியலாக்காதீங்க..
ஏற்கனவே குறுவை, சம்பா சாகுபடி பொய்த்து போன நிலையில், மாநிலங்கள் தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்காமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications