சென்னையைத் தாண்டியும் வர ஆரம்பித்தார் விஜயகாந்த்... ரிஷிவந்தியம் தொகுதியில் விசிட்!
சென்னை: சமீப காலமாக வெளியே எங்கும் நடமாடாமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதா சிறைக்குப் போனதும் புத்துணர்ச்சியுடன் நடமாட ஆரம்பித்துள்ளார். இதே உற்சாகத்துடன் அவர் தனது தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு விசிட் அடித்தார்.
இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த அவருக்கு அவருக்கு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ரிஷிவந்தியம் தொகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

முதலாவதாக தொகுதியில் எலவனாசூர் கோட்டை அருகே உள்ள அல்லூர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் உள்ள அரியூரில் பயணிகள் நிழற்குடை, கனகநத்தம் கிராமத்தில் குடிநீர் குழாய், பூமாரி கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
பின்னர் பகண்டை கூட்டு ரோட்டுக்கு செல்கிறார். அங்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் தொகுதியின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications