நாம் ‘ஏழைஜாதி’... பேனர் போன்ற வீண் செலவுகள் வேண்டாம் : தொண்டர்களுக்கு கேப்டன் அட்வைஸ்!
சென்னை: பணம் வந்து போகும், ஆனால் நிம்மதிதான் முக்கியம் என திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், மணமக்களை வாழ்த்திப் பேசினார். மேலும், தனக்கு விளம்பர பலகைகள் வைத்து வீண் செலவு செய்ய வேண்டாம் எனவும் இந்த விழாவில் தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தே.மு.தி.க. மருத்துவ அணி துணைச்செயலாளர் டாக்டர் முருகேஷ்-ரேகா தம்பதியின் மகள் டாக்டர் ரியா- தொழில் அதிபர் கல்யாணசுந்தரம், வசந்த தம்பதியின் மகன் டாக்டர் அரவிந்த் திருமணம் சென்னையில் இன்று நடந்தது.
நந்தம்பாக்கம் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள இ.வி.பி. ராஜேஸ்வரி மேரேஜ் பேலசில் நடந்த விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

விஜயகாந்த்தும், மனைவி பிரேமலதாவும் சேர்ந்து மங்கலநானை மணமகன் கையில் எடுத்துக்கொடுக்க, அதனை அவர் மணமகள் கழுத்தில் கட்டினார். பின்னர் மணமக்கள் விஜயகாந்த்-பிரேமலதா காலில் விழுந்து வணங்கினர். அட்சதை தூவி அவர்களை விஜயகாந்த் வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி விஜயகாந்த் பேசியதாவது :-
முதல் முறையாக இப்போதுதான் இந்த பகுதிக்கு வந்திருக்கிறேன். வழி நெடுக கட்சி தொண்டர்கள் என்னை வரவேற்று விளம்பர பலகைகள் வைத்து உள்ளனர். இது போன்ற செலவுகளையெல்லாம் செய்ய வேண்டாம் என நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நம் தொண்டர்கள் பணக்காரர்கள் அல்ல. எல்லோரும் ஏழை எளியவர்கள்.
மணமக்கள் சிவன்-சக்தி போல வாழ வேண்டும். நீங்கள் படித்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இல்லறம் நடத்த வேண்டும். இருவருக்குமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வர வேண்டும். அதிகம் படித்து இருக்கிறோம் என்ற எண்ணத்தில் பேசக்கூடாது. சந்தோஷமாக இல்லற வாழ்வை தொடங்கும் நீங்கள் தேவையில்லாமல் சந்தேகப்படக்கூடாது.
வாழ்க்கையில் நிம்மதி முக்கியம். காசு பணம் முக்கியமல்ல. அது வந்து போகும். ஆனால் நிம்மதி எப்போதும் குடும்பத்தில் இருக்க வேண்டும் என கூறி மனதார வாழ்த்துகிறேன்' என்றார்.
இந்தத் திருமண விழாவில் தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசன், வி.என். ராஜன், யுவராஜ், செந்தாமரைக்கண்ணன், காமராஜ், பொருளாளர் இளங்கோவன், நிர்வாகிகள் வேணுராம், ராஜேந்திரநாத், சமுத்திரபாண்டியன், கணேசன், கார்த்திக், நாகராஜ், ராமன், கே.எஸ்.மலர்மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications