தவெக மாநாடு நேரம் அதிரடி மாற்றம்.. வெயிலில் வாடிய ரசிகர்களுக்காக விஜய் எடுத்த முக்கிய முடிவு
விக்கிரவாண்டி: விஜய்யின் தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏராளமான தொண்டர்கள் விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர். அதிகளவு வெயில், குடிநீர் வசதி பற்றாக்குறையால் ஆங்காங்கே சிலர் மயக்கம் போட்டு வருகிறார்கள். இதனால் மாநாட்டை ஒரு மணி நேரம் முன் கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் வருகை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் விஜய்யின் அரசியல் நகர்வை உற்று நோக்கி வருகின்றனர். விஜய் கட்சியின் கொள்கை என்ன, அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலையிலேயே மாநாட்டு அரங்கம் பாதிக்கு மேல் நிரம்பிவிட்டது. பல தொண்டர்கள் நேற்று இரவே விக்கிரவாண்டி வந்து தங்கியுள்ளனர். மாநாட்டு பணிகளை விஜய் நேற்று இரவு சென்று பார்வையிட்டார். முதல் மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றுவதற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 20,000 மின் விளக்குகள், 72 எல்இடி திரைகள், 3 கி.மீ பரப்பளவுக்கு தண்ணீர் தொட்டிகள், 200 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன.
க்யூ ஆர் கோட் மூலம் ரசிகர்களின் வருகை பதிவை கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன. அதிகளவு கூட்டம் கூடுவதால் விக்கிரவாண்டி சுற்று வட்டாரத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நேரம் போக போக கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
மாநாட்டுக்காக தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை குறித்து விஜய் ஏற்கனவே கடிதங்கள் மூலம் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புடன் வந்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டும், பொது மக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வருகிறது. செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்படுமளவுக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுற்றுவட்டாரத்தில் கடைகளும் பெரியளவுக்கு இல்லை. இதனால் மாநாட்டுக்கு வந்த சிலர் ஆங்காங்கே மயக்கம் போட்டு வருகின்றனர்.
இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநாட்டில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர். முதலில் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என கூறியிருந்தனர். வெயிலின் தாக்கத்தால் தற்போது முன் கூட்டியே மாநாட்டை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி மாநாடு மதியம் 3 மணியளவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜய் மாலை 5 மணியளவில் பேசத் தொடங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6 மணியளவில் விஜய் பேசுவார் என கூறப்பட்டது. தற்போது அதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் சுமார் 1.30 மணி நேரம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. மாநாட்டை இரவு 9 மணியளவில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். தற்போது மாநாடு சற்று நேரத்துக்கு முன்பே நிறைவு பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது












Click it and Unblock the Notifications