மணப்பாறை "பெருமாள்சாமி" திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய கிராமம்!
Recommended Video
திருச்சி: மணப்பாறை அருகே இறந்த காளைக்கு மனிதர்களுக்கு நடத்தப்படுவதுபோல இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அப்போது, பெண்கள் கதறி அழுதனர்.
மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி என்ற பழனிச்சாமி. இவர் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு ஒரு கன்றுக்குட்டி வாங்கி, அதனை கோவிலுக்கு விட்டு அதற்கு பெருமாள்சாமி என பெயரிட்டு வளர்த்து வந்தார்.
இந்த காளை மணப்பாறையை சுற்றி உள்ள கிராமங்களில் நடக்கும் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும். இந்த காளை கோவில் காளை என்பதால் கிராம மக்கள் அனைவரும் இதற்கு தனி மரியாதை கொடுப்பார்கள்.
இறுதி சடங்கு
இது நேற்று முன்தினம் மதியம் திடீரென உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என அனைவரும் வந்து இறந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து நேற்று காலை மனிதர்களுக்கு நடத்தப்படுவது போல் காளைக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
கதறி அழுத பெண்கள்
3 பெண்கள் மஞ்சள் கலந்த தண்ணீர் மற்றும் பாலால் காளையின் காலை சுத்தம் செய்தனர். அதன் பின்னர் தலை, நெற்றி, கால் ஆகியவற்றில் சந்தனம், குங்குமம் வைத்த பின் கம்பு போட்டு மரியாதை செய்து வழிபட்டனர். அப்போது, பெண்கள் கதறி அழுதனர்.
காளையின் மீது மண் வைப்பு
தொடர்ச்சியாக பலரும் நிற்க வைக்கப்பட்டு அதில் ஒருவர் அருள் வந்து மாடு இறந்த இடத்திற்கு சென்று பிடிமண் எடுத்துக் கொடுத்த பின் அந்த மண் ஒரு துணியால் கட்டப்பட்டு காளையின் மீது வைக்கப்பட்டது.
இறுதி ஊர்வலம்
இதனையடுத்து இறந்த காளைக்கு வாரிசாக ஒரு கன்றுக்குட்டியை அழைத்து வந்து அதற்கான வழிபாடுகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இறந்த காளையை பாடைபோல் கட்டி இறுதி ஊர்வலம் தொடங்கியது. வீட்டில் இருந்து தாரை, தப்பட்டை, உருமி சத்தம் முழங்க காளையை தூக்கி வந்தனர். அதன் பின்னர் பெண்கள் வாழைப்பழம் மற்றும் பல்வேறு பொருட்களை எடுத்து வந்தனர்.
சோகத்தில் கிராமம்
பழனிச்சாமி தோட்டத்திற்கு சென்றதும் அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் காளை இறக்கி வைக்கப்பட்டு பல்வேறு சடங்கு முறைகள் செய்யப்பட்ட பின் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பெண்கள் ஜாக்கெட் அணியகூடாது என்பது ஐதீகம். இதே போல் நாயக்கர் சமூகத்தினரின் தேவராட்டமும் நடைபெற்றது. 23 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த காளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.