குமரியில் புதிய டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு: மோதலில் 5 பேர் காயம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஏற்பட்ட மோதலில் எஸ்.ஐ.க்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ள பாறையடி ஜங்ஷனில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அரசு மதுப்பானக் கடையை அங்கு வைக்க அப்பகுதி மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அனைவரின் எதிர்ப்பையும் மீறி இங்கு கடை திறக்க முடிவு செய்யப்பட்டு நேற்று இரவு லாரியில் மதுப் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டது.
அதை இறக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாட்டில்களை உடைத்தனர். தகவலறிந்து களியக்காவிளை போலீசார் அங்கு சென்ற போது போலீசாருக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
பொது மக்கள் தரப்பிலிருந்து கல் வீசப்பட்டதில் போலீஸ் ஜீப் கண்ணாடி உடைந்தது. இதில் சிறப்பு எஸ்.ஐ.க்கள் அருள்ராஜ் , சுகுமாரன் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். இவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.