எல்லை தாண்டி பயிர்களை மேய்ந்த மாடுகள்.. சிறை பிடித்த மக்கள்.. தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி அருகேயுள்ள வடக்கு சிலுக்கன்பட்டி பகுதியில் சுமார் 25ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர்களான உளுந்து, கம்பு, சோளம், பாசிப்பயறு, எள், கடலை, மாட்டுச்சோளம், பச்சைப்பயறு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இப்பகுதிகளில் பருவமழை சரியான அளவில் பெய்து வருவதால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. இந்நிலையில் இப்பயிர்களை பக்கத்து கிராமங்களில் இருந்து இரவில் கூட்டம் கூட்டமாக வரும் மாடுகள் மேய்ந்து அழிந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததுடன், பக்கத்து கிராம மக்களிடமும் புகார் தெரிவித்தனர். இருந்தபோதும் மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை கட்டுப்படுத்தவில்லை.
தொடர்ந்து இரவில் மானாவாரி நிலங்களுக்குள் புகுந்த மாடுகள் பயிர்களை நாசம் செய்து வந்தன. மாடுகள் கூட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்று கூடி மாடுகளை சுற்றிவளைத்து பிடித்து கட்டிப்போட்டனர்.
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக தட்டப்பாறை காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்திற்கு வந்த காவல்துறையினர் மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
மானாவாரி பயிர்களை மேய்ந்து நாசப்படுத்திய மாடுகளின் கூட்டத்தை விவசாயிகளை பிடித்து கட்டிப்போட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications