விழுப்புரம் கொடுமை பற்றி வாய் திறக்காத முன்னணி அரசியல்வாதிகள்.. ரஜினி, கமல் எங்கே?
Recommended Video

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கொடுமையான கொலை மற்றும் பலாத்கார சம்பவம் குறித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் முன்னணி அரசியல் தலைவர்கள் யாரும் வாய் திறக்காதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி. கணவரை இழந்தவர். தலித் பிரிவை சேர்ந்தவர்.
சில தினங்கள் முன்பாக இவரது வீடு புகுந்த வெறிக்கும்பல், சிறுவன் என்றும் பாராமல், ஆராயியின் 8 வயது மகனை, அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

மோசமான பலாத்காரம்
ஆராயியின் 14 வயது மகள் மிகக் கொடூரமான முறையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆராயியும் தாக்கப்பட்டுள்ளார். ஆராயி, அவரது மகள் ஆகிய இருவரும் நினைவற்ற நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

நிர்பயா கதி
ஆராயின் மகளுக்கு நேர்ந்த கொடுமை டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்தை ஒப்பிட்டால், குறைந்தது கிடையாது. இருப்பினும் தமிழக முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள்தான் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ரஜினி, கமல்
திடீர் அரசியல்வாதிகளாக விஸ்வரூபம் எடுத்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இதுபற்றி பேட்டியோ, அல்லது சமூக ஊடகங்களில் கருத்தோ தெரிவிக்கவில்லை. அன்புணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லி நிர்பயா, விழுப்புரம் நவீனா, தூத்துக்குடி புனிதா, போரூர் ஹாசினி ஆகியோருக்கு மனித மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு சிறிதளவும் குறைவானது அல்ல. இந்த செயலை செய்தவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்கு வங்கி அரசியல்?
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமானும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இதில் வன்முறையில் மற்றொரு ஜாதியினர் ஈடுபட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளதால், வாக்கு வங்கி அரசியலுக்காக முன்னணி அரசியல் தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

மாற்று அரசியல் இதுவா?
ஏற்கனவே இருக்கும் அரசியல் தலைவர்கள் சரியில்லை என்பதுதான், ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு நுழைய கூறிய காரணம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்றும், இங்கே நடைபெறும் நிகழ்வுகளை பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பார்த்து சிரிப்பதாகவும் கருத்து உதிர்த்தவர்கள். ஆனால், தமிழகத்தில் நடந்த இந்த வேதனையான சம்பவம் குறித்து அவர்கள் பேசவில்லை. ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்கிறார், கமல்ஹாசன் மாற்றம் மக்களிடம் இருந்து வர வேண்டும் என்கிறார். சிஸ்டமும் கெட்டு, மாற்றமும் இல்லாமல் காட்டுமிராண்டி தனமாக ஒரு தாக்குதல் நடந்துள்ள நிலையில், இதை பற்றி அவர்கள் முன்வந்து கருத்து கூறியிருக்க வேண்டாமா?

கார்பொரேட்டுகளுக்கு மட்டுமே கருத்தா
பிரபலங்களின் அழுத்தம், விசாரணையை விரைந்து நடத்த ஊக்கம் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்யும். ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்ததாக கூறும் கமலுக்கு இது ஊழலைவிட மோசமான செயல் என்பது புரியாமல் போனது ஏன்? கார்பொரேட் விவகாரங்களுக்குதான் கருத்து கூறுவது என்ற முடிவில்தான் இருவரும் இருக்கிறார்கள் என்றால், வாக்குகளை போடப்போவது கார்பொரேட்டுகள் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாக்கு வங்கிக்காக மவுனம் காத்தால், இவர்களுக்கும் பிற அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை மக்களும் புரிந்து கொள்வார்கள்.












Click it and Unblock the Notifications