போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி, போலீஸ் முன்னிலையில் வாக்குச்சாவடியில் பணம் பட்டுவாடா...
விழுப்புரம்: விழுப்புரம் வாக்குச்சாவடி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் முன்னிலையிலேயே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள, 218ம் எண்ணுள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை அப்பகுதி மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒன்றிய அ.தி.மு.க., மாணவரணி தலைவர் குமரேசன் வரிசையில் நின்ற பெண்களிடம் இரட்டை இலைக்கே ஓட்டுப் போடும்படி கூறி பணம் அளித்தார். தகவலறிந்து செய்தியாளர்கள் விரைந்து சென்று சம்பவத்தை படம் எடுத்தனர். ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாத குமரேசன் பணம் பட்டுவாடா செய்வதிலேயே மும்முரமாக இருந்தார்.
அதற்குள்ளாக வாக்காளர்களுக்கு அதிமுக பணம் அளிப்பதாக மாற்றுக் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த அதிரடிப்படை போலீசார் சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்றினர்.