அனிதாவின் மரணத்தை மனதில் வைத்து இனி வாக்களியுங்கள்: நடிகர் விஷால்
அனிதாவின் மரணத்தை மனதில் வைத்து இனி வாக்களிப்போம் என நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வு காவு வாங்கிய அனிதாவின் மரணத்தை மனதில் வைத்து இனிமேல் வாக்களிப்போம் என நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் அரியலூர் அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் பேசியதாவது:
வரும் தேர்தலில் இலவசங்களை எதிர்பார்க்காமல், அனிதாவின் மரணத்தை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும். மருத்துவம் படிக்க முடியாத, பொதுத்தேர்வுக்கு பயிற்சி பெற பணம் இல்லை என மாணவர்கள் கவலை பட வேண்டாம், என்னை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு விஷால் பேசினார்.

இட ஒதுக்கீடு பிச்சையா?
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ரஞ்சித் பேசியதாவது: மருத்துவராவதற்கான அனைத்து தகுதியும் இருந்தும் கூட இடஒதுக்கீட்டின் கீழ் படித்த மாணவியாகத் தான் ஊடகங்கள் அனிதாவை பிரதிபலித்தன. உரிமையான இட ஒதுக்கீட்டையே பிச்சை போடுவது போல் செய்து மாணவர்களை மட்டம் தட்டுகின்றனர்.

நீட் தடை தேவை
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் தற்கொலை கல்விச் சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரியாக இருக்கும் நீட் தேர்வை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும்.

வாய்ப்பு மறுப்பு
ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவது அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கல்வியை வைத்து வியாபாரம் செய்யும் சூழ்நிலையும், அரசியல் செய்யும் சூழ்நிலையும் மாற வேண்டும். இவ்வாறு ரஞ்சித் பேசினார்.

சிறியவர்களுக்கும் அரசியல்
நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: வீ்ட்டில் உள்ள சிறுவர்களுக்கு அரசியல் சொல்லி தர வேண்டும். சினிமாவை தெரிந்து வைத்து கொண்டிருப்பதை விட அரசியலை அறிந்து வைத்து கொள்ள வேண்டும். நாம் போராடி, போராடி போராட்டம் என்றால் அரசுக்கு சலிப்பு தட்டி விட்டது. அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.












Click it and Unblock the Notifications