நடிகர் சங்கத் தேர்தல்: அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் வென்றது விஷாலின் பாண்டவர் அணி!
சென்னை: பெரும் பரபரப்புக்கிடையே நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளிலும் வென்று சாதனைப் படைத்தது விஷாலின் பாண்டவர் அணி.
இந்தத் தேர்தலில் ஏற்கெனவே பலஆண்டுகள் நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருந்த சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீண்டும் போட்டியிட்டனர்.
ஆனால் மாற்றம் வேண்டும் என்று முழக்கமிட்ட விஷால் அணி, அனைத்துப் பொறுப்புகளுக்கும் புதியவர்களை நிறுத்தி கடும் போட்டியைத் தந்தது.
வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி 5 மணிவரை பரபரப்பாக நடந்தது.
6 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கினாலும், அடுத்த சில மணி நேரங்களில் முழுமையான முடிவுகள் வந்துவிட்டன.
இந்தத் தேர்தலில் விஷால் அணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளகளும் முக்கியப் பொறுப்புகளைக் கைப்பற்றினர்.
நாசர்
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், எதிரணியின் சரத்குமாரை 109 வாக்குகள் அதிகம் பெற்று தோற்கடித்தார்.
விஷால்
அடுத்த முக்கியப் பதவி பொதுச் செயலாளர். இந்தப் பொறுப்புக்கு விஷாலும் ராதாரவியும் மோதினர்.
விஷால் 307 வாக்குகள் அதிகம் பெற்று ராதாரவியைத் தோற்கடித்தார்.
கார்த்தி
பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் கார்த்தியும், சரத் அணி சார்பில் எஸ்எஸ்ஆர் கண்ணனும் போட்டியிட்டனர். இந்த மோதலில் கார்த்தி அபாரமாக 413 வாக்குகள் அதிகம் பெற்று கண்ணனைத் தோற்கடித்தார்.
சிம்பு தோல்வி
அடுத்து இரு துணைத் தலைவர் பதவிகளுக்கான வாக்குப் பதிவு. இந்த இரு பதவிகளுக்கும் விஷால் அணி சார்பில் கருணாஸும் பொன்வண்ணனும் நின்றனர். அவர்களை எதிர்த்து விஜயகுமாரும் சிம்புவும் போட்டியிட்டனர்.
தோல்வி
இதில் விஷால் அணி சார்பில் போட்டியிட்ட கருணாஸ் 1362 வாக்குகள் பெற்றார். எதிர்த்த விஜயகுமார் 1115 வாக்குகள் பெற்றுத் தோற்றார்.
பொன்வண்ணன் 1235 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்பு 1107 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதன் மூலம் நடிகர் சங்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் விஷாலின் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.
24 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலைக்குள் தெரிந்துவிடும்.