ஆர்.கே.நகரில் அவமானகரமான தோல்விதான் கிடைக்கப் போகிறது... தினகரனுக்கு சாபம் கொடுக்கும் சொந்தங்கள்
குடும்பத்தை மீறி ஆர்கே நகரில் போட்டியிடும் தினகரனுக்கு மோசமான தோல்விதான் கிடைக்கும் என சாபடுமிடுகின்றனராம் சொந்தங்கள்.
Recommended Video
சென்னை: எதிர்ப்புகளை மீறி போட்டியிடும் தினகரனுக்கு மிக மோசமான அவமானகரமான தோல்வியே கிடைக்கும் என சாபமிடுகின்றனர் அவரது சொந்தங்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மிகுந்த வேதனையோடு எதிர்கொள்கிறார் தினகரன். கடந்தமுறை ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் மறைமுகமாக பிரசாரக் களத்தில் இறங்கினார்.
இந்தமுறை தினகரனோடு அவர் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். சசிகலா சொன்னால் மட்டுமே பிரசாரத்துக்குப் போவேன் எனக் கறாராகக் கூறிவிட்டார் விவேக்.
தினகரன், தீபா
அ.தி.மு.க, தி.மு.க என பிரதானக் கட்சிகளை எதிர்த்து தினகரனும் தீபாவும் ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்கின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சகிதமாக கடந்தமுறை வாக்குகளைச் சேகரித்த தினகரன், தனியே தன்னந்தனியேஎன சோகக் கீதம் வாசித்துக் கொண்டிருக்கிறார் இப்போது.
விவேக் கையில் கஜானா
குடும்ப உறுப்பினர்களும் அவரைக் கை கழுவிவிட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு சசிகலா சென்றபோது, கட்சி நிர்வாகத்தை தினகரனும் கார்டன் நிர்வாகத்தை வெங்கடேஷும் கவனித்துக் கொள்ளட்டும் எனக் கூறிவிட்டுச் சென்றார். அடுத்துவந்த நாட்களில் ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி நிர்வாகத்தோடு சசிகலா தொடர்புடைய முக்கிய நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையும் விவேக் கையாண்டு வந்தார். எம்.பி.ஏ படிப்போடு கணக்கு வழக்குகளிலும் கறாராக இருப்பதால் விவேக் பார்க்கட்டும் என உறுதியாகக் கூறிவிட்டார் சசிகலா. இதனை தினகரன் தரப்பு எதிர்பார்க்கவில்லை.
ஆர்கே நகரை கவனித்த விவேக்
முன்னதாக ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டபோது, தேர்தல் களத்தை விவேக் கவனித்து வந்தார். தொகுதி வாக்காளர்களுக்குத் தேவையான பரிசுகள், வாக்குறுதிகள் என தினகரனே மலைத்துப் போகும் அளவுக்கு வேலை பார்த்தார்.
கவனிப்புகளும் வாக்குகளும்
இந்தமுறை விவேக் களமிறங்கினால் ஓரளவு வாக்குகள் கிடைக்கும் என தினகரன் எதிர்பார்த்தாலும், கடந்த சில வாரங்களாக குடும்ப ஆட்களுக்கு எதிராக தினகரன் செய்யும் வேலைகளை கடுகடுப்புடன் பார்த்து வருகின்றனர் சசிகலா உறவுகள். மொத்தத்தில் குடும்பத்தில் இருந்தும் தினகரன் ஓரம்கட்டப்பட்டுவிட்டாராம்.
சொந்தங்களுக்கு கண்டிஷன்
மன்னார்குடி சொந்தங்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகுதான் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி ஆளுக்கு ஆள் டி.விக்களில் பேசுவதை தினகரன் விரும்பவில்லை. இனி யாரும் என்னைக் கேட்காமல் பேசக் கூடாது என தினகரன் கண்டிப்பான குரலில் பேசியிருக்கிறார்.
11 வருஷம் எங்கே போனார்?
இதனால் கொந்தளித்த உறவினர்கள், 11 ஆண்டுகளாக குடும்ப நிகழ்ச்சிகளில்கூட கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார் தினகரன். அப்படிப்பட்டவரை நாங்கள் துணைப் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டோம். இன்று நாங்கள் பிரஸ்மீட் கொடுப்பதைக்கூட அவரால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? கட்சியை நாசம் செய்தவர், எங்களை எப்படிக் கேள்வி கேட்கலாம் எனத் திருப்பிக் கேட்டுள்ளனர். இந்த சண்டைகளுக்கு எந்தவிதப் பதிலும் சொல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் நடராஜன்.
மோசமான தோல்விதான்...
விவேக்கும் கிருஷ்ணபிரியாவும் களத்துக்குள் வருவதை தினகரன் விரும்பவில்லை. சசிகலா தரப்பு என்றால் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். இந்த மோதலால் ஆர்.கே.நகர் களத்துக்கு விவேக் வருவாரா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக மாறிவிட்டது. கார்டன் கஜானா முழுக்க விவேக் பக்கமே இருக்கிறது. தேர்தல் செலவுகளுக்குக்கூட விவேக்கைத்தான் எதிர்பார்த்திருக்கிறார் தினகரன். குடும்ப ஆட்களுக்குள் நடக்கும் மோதலால், ஆர்.கே.நகர் களத்தில் மிக மோசமான தோல்வியைத் தழுவுவார் தினகரன் என சொல்வது அவரது சொந்தங்களே.