ஆலந்தூர் அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமன்: பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு சீட் இல்லை!!
சென்னை: ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாநகராட்சி கவுன்சிலர் வி.என்.பி வெங்கட்ராமன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர் எம்.எல்.ஏ.வாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனால் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் ஆலந்தூர் தொகுதிக்கு வரும் ஏப்ரபல் மாதம் 24ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஆலந்தூர் தொகுதியில் மீண்டும் பண்ருட்டி ராமசந்திரனே போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் ஆலந்தூர் தொகுதிக்கான வேட்பாளரை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். அதன்படி ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் மாநகராட்சி கவுன்சிலர் வி.என்.பி வெங்கட்ராமன் போட்டியிடுகிறார்.
இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கும், ஆலந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிட தனது மகனுக்கும் அதிமுகவில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அடுத்தடுத்து ஏமாற்றங்களைத் தந்துவிட்டார் ஜெயலலிதா.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறிவிட்டு, 2 மாதத்தில் ஓய்வை முடித்துக் கொண்டு அதிமுகவில் இணைந்த பண்ருட்டிக்கு இப்போது உண்மையான ஓய்வைத் தந்துள்ளார் ஜெயலலிதா.
ஆக, பண்ருட்டி கேட்டது கிடைத்துவிட்டது!.. இதுக்கு மேல என்ன வேணும் சார்!












Click it and Unblock the Notifications