சென்னையில் பெரும்பாலான இடங்களில் காலையிலேயே குவிந்த வாக்காளர்கள்... வெயிலுக்குப் பயந்து!
சென்னை: தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் காலையிலேயே ஓட்டுப் போடுவதற்கு மக்கள் அதிக அளவில் குவிந்ததால் சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு எடுத்த எடுப்பிலேயே களை கட்டி விட்டது.
232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் தொடங்கியது முதலே வாக்குப் பதிவு பல இடங்களில் விறுவிறுப்பாக காணப்படுகிறது.

குறிப்பாக வெயில் தாக்கம் அதிகம் உள்ள சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 7 மணிக்கே வாக்களித்து விட வேண்டும் என்ற வேகத்தில் வாக்காளர்கள் குவிந்து விட்டனர். இதனால் வாக்குச் சாவடிகளில் காலையிலேயே கூட்டம் களை கட்டியது.
பகலில் வெயில் அதிகம் இருப்பதால் வெயில் இல்லாத நேரத்திலேயே வாக்களித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர்கள் காலையிலேயே குழுமியதால் பல வாக்குச் சாவடிகளில் கூட்டம் அலை மோதியது.
அதேசமயம், தமிழகத்தின் தெற்கு மற்றும் உட்புற மாவட்டங்கள் சிலவற்றில் மழை பெய்து வருவதால் அங்கு காலையில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையைப் பொறுத்தவரை இரவில் மழை பெய்ததால் தற்போது வெப்பம் குறைந்து இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. பகலிலும் மழை வருமா என்று தெரியவில்லை. புறநகர்ப் பகுதிகளில் வெயில் அடிக்க ஆரம்பித்திருப்பதால் வழக்கம் போல வெயில் வெளுக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications