ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வுக்குப் பிறகு தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுக்காப்பாக வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. நேற்றோடு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இவர்களோடு பா.ஜ.க.,வின் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தலைமை செயலகத்தில் சரி பார்க்கப்பட்டு, ஆர்.கே நகர் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடைபெறும்.
வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு வாக்குபதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடைெபறும். இதையடுத்து, வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டு சென்று ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்படும். இந்த வாக்குபதிவு மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதையடுத்து, வருகிற 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.