கர்நாடகத்தில் கன மழை.. மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியை எட்டியது
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 42,347 கன அடி வீதம் நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் நீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர், கபினி அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணை ஏற்கனவே தனது முழு கொள்ளவையும் எட்டியது. இந்நிலையில் கேரள வனப்பகுதியில் மழை நீடிப்பதால் கபினிக்கு மட்டுமே 33 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கபினி அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அனைத்தும் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கலில் வெள்ளம்
நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரிசல் போக்குவரத்துக்கும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகள்
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
90 அடியான மேட்டூர் அணை
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 3 அடி அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 90.9 அடியாக உள்ளது.
தண்ணீர் வரத்து
அணைக்கு விநாடிக்கு 42 ஆயிரத்து 347 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 52.86 டிஎம்சியாக இருக்கிறது. அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.