வரிசையாய் வந்து குவியும் வாரிசுகள்.. தமிழக மக்களே என்ன பண்ணப் போறீங்க?
Recommended Video
சென்னை: இது அரசியல் வாரிசுகளின் காலம் போல. வரிசையாக வந்து குவியத் தொடங்கியுள்ளனர். மக்களிடம் இவர்கள் திணிக்கப்படுகிறார்கள். இவர்களை மக்கள் ஏற்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.
முன்பெல்லாம் அரசியலில் வாரிசு என்பது ரொம்பக் கஷ்டமானது. அண்ணா, காமராஜர் போன்றோருக்கெல்லாம் வாரிசுகள் கிடையாது. யாரையும் அவர்கள் மக்களிடம் திணிக்கவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதாவைக் கொண்டு வந்தார். ஆனால் ஜெயலலிதா தனது வாரிசாக யாரையும் வெளிப்படையாக கூறியதில்லை. அவரால் முதல்வராக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸின் நிலைமை அனைவரும் அறிந்ததே.
திடீர் திடீர் வாரிசுகள்
ஆனால் இன்று வாரிசுகள் படு சுலபமாக அரசியலில் கால் வைக்க முடிகிறது, படு கேஷுவலாக பதவிகள் குறித்தெல்லாம் கூட பேச முடிகிறது. வெள்ளைச் சட்டை கசங்காமல் இவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
உதயநிதி ஸ்டாலின்
திமுகவில் மு.க.ஸ்டாலினின் வாரிசாக உதயநிதி ஸ்டாலின் கொண்டு வரப்படுகிறார். தான் அரசியலில் குதிக்கப் போவதாக உதயநிதியும் கூறி விட்டார். அதை ஸ்டாலினும் மறுக்கவில்லை. தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார் உதயநிதி. கருணாநிதியின் வாரிசாக வெளிப்படையாக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படுவதற்கு எத்தனை காலம் பிடித்தது, அவருக்கு எப்படியெல்லாம் கருணாநிதி டெஸ்ட் வைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஜெயக்குமார் மகன்
அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஹர்ஷவர்த்தனும் அரசியல்வாரிசாக வலம் வருகிறார். இப்போதைக்கு அவர் தந்தைக்குப் பின்னால் மட்டுமே இருக்கிறார். எம்.பியாக இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே இவரை உள்ளுக்குள் கொண்டு வந்து விட்டார் ஜெயக்குமார்.
டி.ஆர்.பாலுவின் மகன்
டி.ஆர். பாலுவின் மகன் ராஜாவும் அரசியல் வாரிசாக வலம் வருகிறார். எம்.எல்.ஏவாக இருக்கிறார். தந்தையைப் போல உருவத்திலும், உள்ளத்தில் தைரியமானவராகவும் வலம் வருகிறார்.
அன்பில் மகேஷ்
திருச்சி அன்பில் பொய்யாமொழி மு.க.ஸ்டாலினின் நிழலாக வலம் வந்தவர். அவரது மகன் மகேஷ் இப்போது வாரிசாக வலம் வருகிறார். இவர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் நெருங்கிய நண்பரும் கூட.
விஜயகாந்த் மகனும் குதிக்கிறாராம்
அடுத்து விஜயகாந்த் தனது மகனை களத்தில் இறக்கப் போகிறாராம். அதாவது மூத்த மகன் விஜய பிரபாகரனை தனது வாரிசாக இறக்கப் போகிறாராம் விஜயகாந்த். மனைவி, மைத்துனரை ஓரம் கட்டி விட்டு மகன் மூலமாக ஏதாவது புத்துணர்ச்சி கிடைக்குமா என்று முயற்சி செய்யப் போகிறாராம் விஜயகாந்த்.
அடுத்து சரத்குமார் மகனும் வருவாரோ
போகிற போக்கைப் பார்த்தால் சரத்குமாரின் மகனும் கூட அரசியல் களத்தில் இறக்கி விடப்படுவாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அன்றெல்லாம் அடிபட்டு, உதைபட்டு, கொள்கைக்காக நாடி நரம்பு தெரிக்க முழங்கி, சிறைப்பட்டு, மக்களுக்காக போராடி பிறகு கட்சியில் ஒரு அந்தஸ்துக்கு வருவார்கள்.. இப்பெல்லாம்.. என்ன பண்றது.. அது கக்கன் காலம்.. இது??