ராஜஸ்தானில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்ட கலாமின் மெழுகு சிலை
ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்ட அப்துல் கலாமின் மெழுகு சிலை ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
ராமேஸ்வரம் : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மெழுகு சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், தனது பதவிக் காலத்துக்கு பின்னர் கல்லூரி, பள்ளி கருத்தரங்குகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவிற்குச் சென்றபோது அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி காலமானார்.

அவரது உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரூ.15 கோடியில் மணி மண்டபம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் 27-ஆம் தேதி கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளதால் அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார். அந்த விழாவில் ஒலிப்பதற்காக கலாம் குறித்து கலாம்....கலாம்... சலாம்....சலாம் என்ற பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்.
எழுச்சி நாயகன் கலாமுக்கு ஜெய்ப்பூரில் மெழுகு சிலை உருவாக்கப்பட்டது. அந்தச் சிலை ஜெய்ப்பூர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்துல் கலாமின் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று அந்தச் சிலையை ராமேஸ்வரத்துக்கு அனுப்பி உள்ளனர்.
அந்தச் சிலை 25 கிலோ மெழுகால் தயாரிக்கப்பட்டது. கலாமின் குடும்பத்தினர் அந்தச் சிலையை கலாம் அறிவுசார் மையத்தில் வைப்பதற்காக அதை தங்களுக்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் அந்த மெழுகு சிலையை ராமேஸ்வரத்துக்கு அனுப்பி உள்ளனர் அருங்காட்சியக அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications