இது பஞ்ச பாண்டவர்கள் அணி... தேர்தலில் நாங்களே வெல்வோம்- இது முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: 2016 சட்டசபைத் தேர்தல் ஒரு அரசியல் போர். இந்த போரில் மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக வெற்றி பெறும். நாங்கள் பஞ்ச பாண்டவர்கள். நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது அதிமுகவிற்கும் மக்கள் நலக்கூட்டணி, தேமுதிகவிற்கு இடையேயான குருச்சேத்திர போர் இதில் இந்த பாண்டவர் அணி வெற்றி பெரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி இடையே கூட்டணியும், தொகுதி உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அறிவித்தனர். தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கூட்டணி உடன்படிக்கையில் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது அவர், 2016 சட்டசபைத் தேர்தல் ஒரு அரசியல் போர் என்று குறிப்பிட்டார்.
மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக பஞ்ச பாண்டவர்கள் என்று கூறிய அவர், கூட்டணியில் தோற்றது போல தேர்தலிலும் திமுக தோற்கும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
போர்க்களம் தயாராக இருக்கிறது. பாண்டவர்களாகிய நாங்களும் தயாராகிவிட்டோம் என்று கூறிய முத்தரசன், இந்த அரசியல் போரில் நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய , ஜி. ராமகிருஷ்ணன், எங்களின் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெறும். மார்ச் 23 தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத மகத்தான நாள். இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். மாவீரன் பகத்சிங் நினைவு நாளான இன்று மகத்தான கூட்டணி ஏற்பட்டுள்ளது. மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பார் என்றும் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications