தேமுதிக வரட்டும்.. ஆனா பாமகவை சேத்துக்க மாட்டோம்.. "குழந்தை" மாதிரியே பேசும் இளங்கோவன்!
சிவகங்கை: திமுக கூட்டணிக்கு தேமுதிக வரட்டும். ஆனா பாமகவை சேத்துக்க மாட்டோம். அவங்க தனியாவே போட்டியிடட்டும் என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திமுக கூட்டணியில் முதல் ஆளாகப் போய் சேர்ந்து தனது இடத்தை சற்று பாதுகாப்பாக்கி விட்டது காங்கிரஸ். இதே தெம்புடன் தற்போது தேர்தலையும் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கை வந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவரது பேச்சிலிருந்து...
செயல்படாத முதல்வர்
தமிழகத்தில் உள்ள முதல்வர் செயல்படாத முதல்வராக உள்ளார். அதிமுக அரசை எதிர்த்து அனைத்துத் தரப்பு மக்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
யாருடனும் பேசாத அரசு
ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் யாரையும் இந்த அரசு சந்தித்தோ, அழைத்தோ பேசுவதில்லை. கடந்த 5 வருடங்களில் சென்னையைத் தவிர வேறு எந்த ஊருக்கும் போய் மக்களைச் சந்திக்கவில்லை ஜெயலலிதா.
பாடம் புகட்டுவார்கள்
இதற்கெல்லாம் மக்கள் சரியான பாடத்தை வரும் சட்டசபைத் தேர்தலில் புகட்டுவார்கள். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்.
பேசாம இங்க வந்திருங்க
இதனால்தான் சொல்கிறேன். தேமுதிக இந்தக் கூட்டணிக்கு வர வேண்டும். தேமுதிக மட்டுமல்லாமல் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இங்கு வர வேண்டும்.
பாமகவைச் சேர்க்க மாட்டோம்
திமுக கூட்டணிக்கு தேமுதிகவை வரவேற்கிறோம். அதேசமயம், பாமகவை சேர்க்க மாட்டோம். அவர்கள் வருகிற தேர்தலில் தனித்தே போட்டியிடட்டும். நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடட்டும் எனறார்.
இளங்கோவன் பேச்சைப் பார்த்தால், இந்தக் குழந்தைகள் விளையாட்டின்போது நீ வராதே உன்னை சேத்துக்க மாட்டேன் என்று சொல்வார்கள் அல்லவா.. அது மாதிரியே ஒரு பீலிங்.!