18 வயதானவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்த கூடாது- ஹைகோர்ட்
சென்னை: மகள்கள் மனம் மாறினால் ஈஷா யோகா மையத்தில் இருந்து பெற்றோர் அழைத்துச் செல்லலாம். ஆனால் 18 வயது நிரம்பியவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அருகே வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ், தனது 2 மகள்களை மூளைச்சலவை செய்து துறவறம் மேற்கொள்ள வைத்ததாகவும், யோகா மையத்தில் இருந்து 2 மகள்களை மீட்டு தரக்கோரியும் அவரது தாயார் சத்யஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட எஸ்.பி, மாவட்ட முதன்மை நீதிபதி, சட்ட மைய வழக்கறிஞர்கள் கொண்ட மூவர் குழு ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நீதிபதி பொங்கியப்பன்
இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன், மாவட்ட எஸ்.பி. ரம்யாபாரதி மற்றும் சட்ட மைய வழக்கறிஞர்கள் கொண்ட மூவர் குழு, ஈஷா யோகா மையத்திற்கு நேற்றுமுன்தினம் மாலை நேரில் சென்றது.

நீதிபதி விசாரணை அறிக்கை
அங்கு சன்னியாசம் பெற்ற கீதா, லதா மற்றும் ரமேஷ் பாலகுரு ஆகியோரிடம் தனியறைகள் தனித்தனியாக 4 மணி நேரம் மூவர் குழு விசாரணை நடத்தியது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பொங்கியப்பன், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் உத்தரவு
இதனையடுத்து விசாரணை அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், ஈஷா மையத்தில் உள்ள 2 மகள்களையும் பார்க்க பெற்றோரை அனுமதிக்க உத்தரவிட்டது. மேலும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக இரண்டு பெண்களும் விசாரணயின் போது கூறியுள்ளனர். எனவே மகள்களின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு முடித்து வைப்பு
நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் மகள்கள் மனம் மாறினால் பெற்றோர் அழைத்துச் செல்லலாம். ஆனால் 18 வயது நிரம்பியவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்தனர். பெண்களின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications