அமித் ஷாவை காப்பாற்றியதால் ஆளுநர் பதவி கிடைத்ததா?: முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் 'நழுவல்'
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவை போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து காப்பாற்றியதால்தான் ஆளுநர் பதவி கிடைத்ததாக கூறப்படுவது குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் கேரளாவின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ள பி. சதாசிவம் நழுவலான பதிலை அளித்துள்ளார்.
கேரளா மாநில ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித், ராஜினாமா செய்தைத் தொடர்ந்து பி. சதாசிவத்தை கேரளா ஆளுநராக நியமித்து ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார். கேரளா ஆளுநராக சதாசிவம் நாளை காலை பதவியேற்க இருக்கிறார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவத்துக்கு ஆளுநர் பதவி வழங்க மோடி அரசு முன்வந்ததற்கு காரணமே, பாஜக தலைவர் அமித்ஷாவை குஜராத் துளசிராம் பிரஜாபாதி போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து காப்பாற்றியதால்தான் என்றும் கூறப்பட்டது.
அதாவது குஜராத்தில் அப்பாவியான துளசிராம் பிரஜாபதி, போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2வது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இந்த தகவல் அறிக்கையின் கீழ் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் அமித்ஷா மீண்டும் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைதாகும் சூழ்நிலை உருவானது. ஆனால் அமித்ஷா தரப்போ, உச்சநீதிமன்றத்தில் 2வது முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி முறையிட்டது.
இதை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து அமித்ஷா மீதான 2வது முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட்டது. இதனால் கைதாவதில் இருந்து அமித்ஷா தப்பினார்.
அமித்ஷாவை இப்படி கைதாவதில் இருந்து தப்பிக்க வைத்ததால்தான் உங்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளதா? என்று நீதிபதி சதாசிவத்திடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் சதாசிவம் அளித்துள்ள "நழுவல்" பதில்:
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அமித்ஷா வருவார் என்பது யாருக்குமே தெரியாது. அத்துடன் இந்த வழக்கில் அமித்ஷாவை நாங்கள் விடுதலை செய்துவிடவில்லை. சோராபுத்தீன் என்கவுன்ட்டர் வழக்கை மகராஷ்டிராவுக்கு மாற்றி உத்தரவிட்டது நான்.
அதே தீர்ப்பில் கூட, இந்த வழக்கில் அமித்ஷாவுக்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்றும்கூட கூறியுள்ளேன்.
இவ்வாறு சதாசிவம் கூறியுள்ளார்.
அமித்ஷா மீதான 2வது முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது பற்றி எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் 'நழுவி'க் கொண்டார் சதாசிவம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications