மதிமுகவை நாங்கள் அழிக்க நினைக்கவில்லை... சொல்வது ஸ்டாலின்
சென்னை: ம.தி.மு.க.வை உடைக்க நினைத்திருந்தால் எப்போதோ உடைத்திருப்போம் அந்த எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இருந்தது இல்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தானாக விரும்பி நிம்மதியை தேடி இங்கு வருகிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் 2,000 தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். மதிமுக, பாமக, விசி, தேமுதிக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர். மதிமுக மதுராந்தகம் நகரச் செயலாளர் தயாளன் தன் ஆதரவாளர்களுடன் இணைந்தார். இந்த இணைவு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மதிமுகவை நாங்கள் உடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ம.தி.மு.க.வை சேர்ந்த 160 தொண்டர்கள் உள்பட அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
அந்த இணைப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ''தி.மு.க. தொண்டர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும், அதுவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அண்மையில் தொடர்ந்து சில நாட்களாக பத்திரிகைகளில், ம.தி.மு.க.வில் இருந்து தாய் கழகமான தி.மு.க.விற்கு வந்து சேர்கிறார்கள் என செய்திகள் வந்துள்ளன.
நாங்கள் அந்த கட்சியை உடைக்கும் முயற்சியில் இருப்பதாக கூறுகிறார்கள். நாங்கள் உடைக்க வேண்டும் என்று நினைத்தால் எப்போதோ உடைத்திருப்போம். ஆனால், அவர்கள் தானாக விரும்பி நிம்மதியை தேடி இங்கு வருகிறார்கள். இன்று, நீங்கள் மட்டுமின்றி நாங்களும் முழு நிம்மதியை பெற்றுள்ளோம். தி.மு.க. இன்று ஆட்சியிலோ, எதிர் கட்சியாகவோ இல்லாத நிலையிலும், கருணாநிதியை நம்பி பிற கட்சிகளை சேர்ந்த நீங்கள் எல்லாம் வந்துள்ளீர்கள்.
ஏப்ரல் மாதம் 2016 சட்டமன்ற தேர்தலில் நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டும். மக்களிடம் இந்த உணர்வை பெறுவதற்கான பொறுப்பை நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தான் உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களிடம் பிரசார பீரங்கிகளாக மாறி தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ய வேண்டும்" என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications