தினகரன் எங்களுக்குத் தேவையில்லை.. பட்டுன்னு கதவை இழுத்துச் சாத்திய ஜெயக்குமார்
சசிகலா குடும்பத்தைச் சார்ந்து நாங்கள் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தினகரன் தலையீடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா குடும்ப தயவு தேவையில்லை. தினகரன் தலையீடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம் என்றும் எடப்பாடி அணியைச் சேர்ந்த நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஓபிஎஸ், சசிகலா அணி என அதிமுக பிரிந்துள்ள நிலையில் தற்போது எடப்பாடி அணி, தினகரன் அணி என சில்லு சில்லாக சிதறியுள்ளது.

திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன், கட்சியை விட்டு தன்னை யாரும் நீக்க முடியாது என்றும் தான் கட்சிப்பணியில் நீடிப்பதாகவும் கூறினார். கட்சி ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்ற நினைப்பதை அறிந்த ஈபிஎஸ் அணியினர் ஒன்றிணைந்து இன்று ஆலோசனை நடத்தினர்.
தினகரன் காலையில் பெங்களூரு கிளம்பி சென்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசித்தனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஏப்ரல் 17ஆம் தேதி நாங்கள் என்ன முடிவு எடுத்தோமோ அதில் உறுதியாக இருக்கிறோம்.
யாருடைய தயவும் இன்றி ஜெயலலிதா ஆசியுடன் அவருடைய வழிகாட்டுதலுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.
ஆக கட்சியிலும், ஆட்சியிலும் இடமில்லை என்று டிடிவி தினகரனுக்கு கதவை சாத்திவிட்டனர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர். இதனால் அதிமுக மேலும் பல அணிகளாக சிதறியுள்ளது. தினகரன் பெங்களூருவில் இருந்து வந்த பின்னர் தெரியும் யார் யார் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள் என்று.












Click it and Unblock the Notifications