எடப்பாடியார் அணியில் எங்களோட "ஸ்லீப்பர் செல்" இருக்காங்க.. தினகரன் புதுப் பேச்சு!
எங்கள் அணி எம்எல்ஏக்கள் சிலர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் ஸ்லீப்பர் செல்கள் போல இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் பகீர் கிளப்பியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அணியில் எங்களுக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல் போல எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். தேவையான போது ஆதரவு தருவார்கள், எங்களின் பலத்தை நிரூபிப்போம் என்று தினகரன் கூறியுள்ளார்.
சசிகலாவின் பிறந்தநாளையொட்டி பெங்களூரு சிறையில் உள்ள அவரை இன்று தினகரன் சந்தித்தார். அதற்குப் பிறகு தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் சசிகலா குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும். அவர் மீதான அவப்பெயர் நீங்கும். புடம் போட்ட தங்கம் போல எங்கள் பொதுச்செயலாளர் வெளியே வருவார் என்றார்.
சட்ட சிக்கல்கள்
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி, அதை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிப்பதில் தவறில்லை. ஆனால், இதில் சட்ட சிக்கல் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சுயநலத்துக்காகத்தான் வேதா நிலையத்தை அரசு நினைவிடம் ஆக்குகிறது என்றால் அது சரியாக இருக்காது.
அற்ப ஆயுள்
தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அணிகள் இணைவது ஒன்று. பதவி, சுயகாரணங்களால் இணைப்பு நடப்பது சந்தேகம். அவசர காலத்தில், வியாபார நோக்கத்தோடு அணிகள் இணைப்பு ஏற்பட்டால் அதன் ஆயுட்காலம் நீடிக்காது.
ஆபரேசன் செய்வோம்
சசிகலா சில ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். அதன்படி அடுத்தடுத்து சில ஆபரேசன்கள் செய்யப்படும். மற்ற அணியில் எங்களுக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல் போல எம்.எல்.ஏக்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் தேவையான போது எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அப்போது நாங்கள் பலத்தை நிரூபிப்போம்.
பீதி கிளப்பும் தினகரன்
தினகரனை வெளிப்படையாக சந்தித்து பல எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்று கூறி பீதியை கிளப்பியிருக்கிறார். யார் யார் அந்த ஸ்லீப்பர் செல்லோ.