"மாடு மேய்க்க தயாராக இருந்தால் மாடு வழங்குவோம்": தேமுதிக பெண் எம்.எல்.ஏவை கலாய்த்த அமைச்சர் சின்னையா
சென்னை: "நீங்கள் மாடு மேய்க்க தயாராக இருந்தால் இலவச மாடு வழங்க ஏற்பாடு செய்யலாம்" என்று சட்டசபையில் தேமுதிக பெண் எம்.எல்.ஏ சுபாவை பார்த்து அமைச்சர் சின்னையா குறிப்பிட சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் இன்று பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடந்தது. இதில், தே.மு.தி.க. உறுப்பினர் சுபா பேசும் போது, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. இது போல் விலையில்லா ஆடு, மாடுகளையும் அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் சின்னையா குறுக்கிட்டு, எல்லோரும் ஆடு, மாடு மேய்ப்பதில்லை. உறுப்பினர் மாடு மேய்க்க தயாராக இருந்தால் அவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யலாம் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய எம்.எல்.ஏ சுபா, நான் 3 மாடுகளை வளர்க்கிறேன், களை எடுப்பேன், தோட்ட வேலை செய்வேன் என்றார். தே.மு.தி.க. உறுப்பினரின் இந்த பேச்சால் சபையில் சிரிப்பலை எழுந்தது.