ஜெ. சிகிக்சை பற்றி டாக்டர்கள் சொன்னதை நம்பினோம்.. அப்பவே ஆலோசித்தேன்.. ஓபிஎஸ்
ஜெயலலிதாவிற்கு கொடுத்த சிகிச்சை பற்றி டாக்டர்கள் சொன்னதை நாங்களும் நம்பினோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தூத்துக்குடி: நான் முதல்வராக இருந்த போதே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சில மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அப்பல்லோ டாக்டர்கள் சொன்னதை முழுமையாக நம்பியதாகவும் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அரசியல் காரணத்துக்காக தமக்கே உரிய பாணியில் விதவிதமாக யாரும் சிந்திக்காத கருத்துகளை கூறுவது மு.க.ஸ்டாலினுக்கு வாடிக்கை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியும், மரணத்தில் உள்ள மர்மங்களை மக்கள் அறிந்து கொள்ளவே சிபிஐ விசாரணை கேட்பதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் நம்பினோம்
தொடர்ந்து பேசிய, ஓ. பன்னீர் செல்வம், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது யாராலும் அவரை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருந்தது. டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் குறிப்புகளை கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் வெளியிட்டனர். அதனை நாங்களும் நம்பினோம்.
சிபிஐ விசாரணை
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்டு உள்ள மர்மங்கள், சந்தேகங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அதிகாரிகளிடம் ஆலோசனை
நான் முதல்வராக இருந்த போதே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சில மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.
அவசியமில்லை
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்களை வெளியிடுவோம் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கூறி உள்ளார். அவர் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.