சிறப்பாக செயல்படுகிறோம்.. சீக்கிரமே முடிவு கட்டி விடுவோம்.. நம்பிக்கையைத் தெறிக்க விடும் ஸ்டாலின்!
சென்னை: இந்த ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டக் கூடிய வகையில் திமுகவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வியூகம் என்றெல்லாம் ஜெயலலிதா பேசி வருவது, அவரது வீழ்ச்சி தொடங்க விட்டதையே காட்டுகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கோபாலபுரம் வந்து திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சிலிருந்து...
அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் விரும்பும், தமிழக மக்களுக்கு விடுதலை பெற்று தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்ற நம்பிக்கை புத்தாண்டு தினத்தில் பிறந்துள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் செயலற்ற, ஊழல் மிகுந்த, இந்த ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய வகையில் திமுக நிர்வாகிகள் சிறப்பாக கடமையாற்றி வருகிறார்கள்.
ஜெயலலிதாவைப் போலவே அதிமுகவின் பொதுக்குழு கூட்டமும் பொய்கள் நிறைந்ததாக நடந்து முடிந்துள்ளது. என் கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே தெரியவில்லை என பேசிவந்த ஜெயலலிதா இப்போது சட்டசபைத் தேர்தலின் போது அதற்கான வியூகம் வகுக்கப்படும் என சொல்லியிருப்பது, அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
ஜனவரி முதல் வாரத்திலிருந்து மீண்டும் தொடங்கவுள்ள நமக்கு நாமே பயணம் மீதமுள்ள 22 சட்டசபைத் தொகுதிகளில் பிப்ரவரி மாத இறுதிவரை நடைபெறவுள்ளது. நமக்கு நாமே பயணத்திட்டம் பொதுமக்களை மட்டுமின்றி ஜெயலலிதாவையும் கவர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது தொடர்பாக பல விளக்கங்களை அதிமுக பொதுக்குழுவில் பேசியபோது தெரிவித்துள்ள ஜெயலலிதா அதுகுறித்து நீதிவிசாரணை நடத்த தயாரா என்று தெரிவிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் தலைவர் கலைஞரின் அனுமதி பெற்று விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications