பன்னீரை பார்த்தா பாவமா இருக்கு.. இனவெறியை தூண்டிய ராஜபக்ஷே நிலைதான் எடப்பாடிக்கு - டிடிவி தினகரன்
மயிலாடுதுறை: இனவெறியை தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும் என டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார்.
பல்வேறு பரபரப்புகள் வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி காலை சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை பொதுச்செயலாளர்கள்
இதனை தொடர்ந்து அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள துணை பொதுச்செயலாளர்களுக்கான பதவிகளை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

வேலுமணி, பொன்னையன்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும், பொன்னையன் அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

டிடிவி தினகரன் பேச்சு
இந்த நிலையில், மயிலாடுதுறையில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "அடிப்படை உறுப்பினர்களால் மட்டும்தான் அதிமுகவின் பொது செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இதை யாரும் மாற்ற முடியாது என்பதை எம்ஜிஆர் கட்சி சட்ட திட்டத்திலும், உயிலிலும் கூட எழுதி உறுதிப்படுத்தியுள்ளார். சிலரை வசியப்படுத்தி என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.

பன்னீர்செல்வத்தை பார்த்தால்..
பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது. இலங்கையில் இனவெறியை தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும். துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் அதிக பொருட்செலவு செய்தால் அவரைகூட அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்குவார்கள். விரைவில் அதிமுகவை மீட்போம்." என்றார்.












Click it and Unblock the Notifications