சட்டென்று மாறுது வானிலை... சளி பிடித்து நெல்லை மக்களுக்கு ஒரே தொல்லை!
நெல்லை: கடந்த சில நாட்களாக அடிக்கடி சீதோஷ்ண நிலை மாறி வருவதால் நெல்லை வாழ் மக்களின் இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழி அதிகரித்துள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் குளிர்ந்த காற்றுடன் பனிப்பொழிவும் இருப்பதால் பொதுமக்கள் அதிகாலை நீண்ட நேரம் கழித்தே எழுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக இருக்கிறது பகல் பொழுது. காலை 7 மணிக்கு சூரியன் உதிக்க தொடங்கியதும் பனி காணாமல் போய் விடுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தொடங்கி விடுகிறது.
இதனால் பலர் பனியால் சளி, இருமல் ஏற்பட்டும், மேலும் பலர் வெப்பத்தாக்கத்தால் வயிற்று பொருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பனிப்பொழி காரணமாக நெல் கதிர்கள் மற்றும் காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாலை பனிப்பொழி காரணமாக நடைபயிற்சி மேற்கொள்வோர் காலை வெகு நேரம் கழித்தே நடை பயிற்சி செய்ய வருகின்றனர்.
நெல்லையில் பகல் பொழுதில் குறைந்த பட்சம் வெப்பம் 18 முதல் 19 டிகிரி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நன் பகலில் தொடர்ந்து வெயில் அடித்தாலும் அதிகாலை நிலைமை தலை கீழாக மாறி விடுகிறது. வனப்பகுதிகளை அழிப்பதால் காற்று தடைப்பட்டு பருவநிலைகள் மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பருவ மழைகள் பெய்து குடிநீர் பற்றாக்குறை, விவசாயம் படுத்து அரிசி பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகள் எழும் என அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.