பலத்த மழை பெய்யும்.. கடலோர மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்களில் ஒருவரான பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக வடமாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் தான் மழை தீவிரமடைந்துள்ளது.
தற்போது தென்வங்ககடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசாக மழை பெய்தது. அதன்படி அதிகபட்சமாக மாதவரம், எண்ணூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழை பெய்தது.

புழல், நுங்கம்பாக்கம், பொன்னேரி, செங்குன்றம், கேளம்பாக்கம், தாமரைப்பாக்கம், சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டரும், செம்பரம்பாக்கம், கொளப்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, திருவலங்காடு, சோழவரம், பூண்டி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டரும், காஞ்சீபுரம், தரங்கம்பாடி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், சீர்காழி, திருத்தணி ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டரும் மழை பெய்தது.
தென்வங்க கடலில் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் தாழ்வு நிலையாகவே நீடிக்கிறது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள், ஒரு சில தென் கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் மற்றும் ஒரு சில உள்மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில இடங்களில் இடைவெளிவிட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை. ஓரிரு நாட்கள் கடந்த பின்னர் தான் இதனுடைய நிலை என்னவென்று தெரியவரும் என்றார் அவர்.
சென்னையில் மழை
இதற்கிடையே மேற்று மாலைக்கு மேல் சென்னையின் பெரும்பாலான இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையின் உட்புறப் பகுதிகளில் இரவில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. புறநகர்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்கிறது.
வட கிழக்குப் பருவ மழையின் தொடக்கத்தின்போது தொடர்ந்து நான்கு நாட்கள் சென்னையில் மழை வெளுத்துக் கட்டியது. அதன் பின்னர் சரிவர மழை இல்லை. இந்த நிலையில் 2வது சுற்று மழையாவது தொடர்ந்து பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications