பெண் குழந்தைகள் கல்விக்காக சுற்று பயணம் செய்த மே.வங்க வாலிபர் மீது தாக்குதல்
நெல்லை: பெண் குழந்தைகள் கல்வியை வலியுருத்தி விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு வங்க வாலிபர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டம் நலகோஷா கிராமத்தை சேர்ந்தவர் சுலால் சர்க்கார். பள்ளி ஆசிரியரான இவருக்கு விபத்தி ஏற்பட்டதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு்ள்ளது. காலை இழந்த இவர் பெண் குழந்தைகள் கல்வி குறித்து இந்தியா முழுவதும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து அதன்படி அவர் காஷ்மீரில் தனது பயணத்தை தொடங்கினார்.
பஞ்சாப், அரியானா, கர்நாடகா, கேரளா வழியாக குமரி மாவட்டம் வந்தார். பின்னர் நெல்லை மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். சம்பவத்தன்று அவர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் முன்பு இரவு நேரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது குடிபோதையில் வந்த சில மர்ம நபர்கள் அவரிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தர மறுக்கவே அந்த கும்பல் அவரை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயம் அடைந்த அவர் பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடன் அவர் கூறியதாவது :-
குழந்தைகள் கல்வி விழிப்புணர்வுக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். நெல்லை வந்த போது மர்ம கும்பல் என்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதனால் நான் சுற்று பயணத்தை ரத்து செய்ய போவதில்லை. தொடர்ந்து நான் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். ஆந்திரா, ஒரிசா வழியாக திரிபுரா சென்று சுற்றுப்பயணத்தை முடிக்க உள்ளேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications