அழகிரியிடம் ஆதரவு கேட்டேன்: வாழ்த்தி, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார்- வைகோ
மதுரை: அழகிரியிடம் மதிமுக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு தான் கேட்டதற்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று அவர் தெரிவித்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு சென்று அவரை இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நடந்தது.
அதன் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அழைப்பு
அண்மையில் நானும், அழகிரியும் மதுரையில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தோம். அப்போது இருவரும் பேசி அன்பை பரிமாறினோம். அந்த சமயத்தில் தான் மதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறு அவரிடம் கேட்டேன். அவரோ வீட்டுக்கு வாருங்கள் என்றார். அதன் படி இன்று அவரை சந்தித்து பேசினேன்.
சினிமா பாடல்கள்
இன்று நாங்கள் இருவரும் பழைய நினைவுகளை பரிமாறினோம். இருவருக்கும் பழைய சினிமா பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அழகிரிக்கு பழைய சினிமா பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்கும். நாங்கள் ஏற்கனவே பழைய பாடல்கள் அடங்கிய சி.டி.க்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.
சி.டி.
நான் அமெரிக்கா சென்றபோது அங்கிருந்து செங்கிஸ்கான் சிடி வாங்கி வந்து அழகிரிக்கு கொடுத்தேன். கடந்த 1993ம் ஆண்டு நான் அழகிரியை அவரது வீட்டில் சந்தித்து பேசியதை அவர் நினைவு கூர்ந்தார். இருவரும் பழைய நினைவுகளை பரிமாறினோம்.
ஆதரவு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அழகிரியிடம் கேட்டேன். அவரும் வாழ்த்திவிட்டு, அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்றார்.